← Back to Reflections
Sermons & Homilies Sunday Reflections

டிஜிட்டல் உலகமும் தொலைந்த பிள்ளைகளும்... மீட்டுத்தரும் இல்லச் சூழல்!

Published on August 30, 2026

22வது ஞாயிறு மறையுரை

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அன்புமிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

இன்றைய நற்செய்திப் பகுதியை நாம் தியானிக்கும் போது, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் மிக உயர்ந்த பதவி உயர்வு பெற்ற ஒரு அதிகாரி, அடுத்த பதினைந்தே நிமிடங்களில் அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படும் ஒரு விசித்திரமான, அதிர்ச்சிகரமான சூழலை நாமங்கே பார்க்கிறோம்.

இன்றைய நற்செய்திப் பகுதிக்குச் சற்று முன்பாக, புனித பேதுரு ஆண்டவர் இயேசுவைப் பார்த்து, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று மிக ஆழமான விசுவாச அறிக்கை அறிக்கையிடுகின்றார். இயேசுவும் அவரைப் பாராட்டி, அவருக்கு "பாறை" (Petros) என்று பெயரிட்டு, விண்ணரசின் சாாவிகளை அவரிடம் ஒப்படைத்துத் திருஅவையின் தலைவராகப் பொறுப்புயர்த்துகின்றார்.

ஆனால், அதே பேதுரு, அடுத்த சில நிமிடங்களில் இயேசு தம்முடைய துன்பங்கள், சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசத் தொடங்கும்போது, அவரைத் தனியே அழைத்துக்கொண்டு போய், "ஆண்டவரே, இது உமக்கு ஒருபோதும் நிகழக்கூடாது" என்று தடுத்துப் பேசுகின்றார்.

உடனே இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து,

"என் பின்னால் போ, சாத்தானே! நீ எனக்குத் தடையாயிருக்கிறாய்; ஏனெனில் உன் எண்ணம் கடவுளுக்கு ஏற்றதல்ல, மனிதருக்கு ஏற்றது" (மத்தேயு 16:23)

என்று கடிந்துகொள்கின்றார்.

விண்ணரசின் திறவுகோல்களைப் பெற்ற "பாறை" என்ற உயரிய நிலையிலிருந்து, அடுத்த பதினைந்தே நிமிடங்களில் "சாத்தானே" என்று கடிந்துரைக்கப்பட்டு, அப்பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படும் அளவுக்குப் பேதுரு ஏன் வீழ்ச்சியடைந்தார்?

ஏனெனில், பேதுரு இயேசுவை நேசித்தார்; ஆனால், சிலுவையும் துன்பமும் இல்லாத, தமக்கு சௌகரியமான ஒரு மெசியாவை அவர் விரும்பினார். கடவுளின் திட்டத்தை விட்டுவிட்டு, வெறும் மனித உணர்வுகளுக்கும் தற்காலிகச் சௌகரியங்களுக்கும் முதன்மை கொடுத்தமையாலேயே அவர் உடனடியாக வீழ்ச்சியடைந்தார்.

1. இன்றைய குடும்பங்களின் அமைதியான மனவேதனை

பேதுருவின் இந்த மனநிலைதான் இன்று நம்முடைய குடும்பங்களிலும் எதிரொலிக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் நம்முடைய இல்லங்களைச் சற்று உற்றுநோக்கினால், அங்கே ஒரு மெளனமான மனவேதனை நிலவுவதை நாம் உணர முடியும். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நவீன உலகம், மனிதர்களைத் தொழில்நுட்பத்தின் வழியாக மிக நெருக்கமாக இணைத்திருப்பதாகக் கூறினாலும், நடைமுறையில் நம்முடைய வீடுகளுக்குள் மனிதர்களுக்கு இடையேயான தூரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நம்முடைய சொந்தப் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் நம் கண்ணெதிரிலேயே வாழ்ந்தாலும், அவர்கள் நம்மைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது போன்றதொரு உணர்வு பெற்றோருக்கு ஏற்படுகிறது. அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றதற்குக் காரணம் புவியியல் இடைவெளி அல்ல; மாறாக, அவர்களுடைய கரங்களில் இருக்கும் அந்தச் சிறிய கைபேசித் திரைக்குள் (Smartphone) அவர்கள் தங்களை முழுமையாகத் தொலைத்துவிட்டமையே ஆகும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நேரங்களில்கூட, பிள்ளைகளின் கவனமும் பார்வையும் அந்தத் திரையிலேயே நிலைத்திருக்கின்றன. பெற்றோர் உரையாட முற்படும் வேளையில், அங்கிருந்து வெளிப்படுவது அலட்சியமான, அரைகுறையான பதில்களே. இந்த மாய உலகத்தைப் பார்த்து, "நம் குடும்ப உறவுகள் இப்படிச் சிதைந்துபோகின்றனவே" என்று பெற்றோர் பலரின் உள்ளங்கள் ஆற்றாமையினாலும் ஏமாற்றத்தினாலும் பாரமடைந்துள்ளன.

2. சுயபரிசோதனை: பிள்ளைகள் ஏன் மாய உலகை நோக்கிச் செல்கிறார்கள்?

ஆனால், இறைவார்த்தையின் வெளிச்சத்தில் நாம் ஒரு முக்கியமான கேள்வியை நம் மனசாட்சியிடம் கேட்கக் கடமைப்பட்டுள்ளோம்: பேதுருவைப் போல நாமும் வெறும் மனித உணர்வுகளுக்கு இடம் கொடுத்து வழிதவறிவிட்டோமா? நம் பிள்ளைகள் ஏன் அந்த டிஜிட்டல் உலகத்தை நோக்கி ஓடுகிறார்கள்? அவர்கள் தேடுகின்ற மனநிறைவும், அமைதியும், மகிழ்ச்சியும் நம்முடைய வீடுகளில் அவர்களுக்குக் கிடைக்காமல் போனது ஏன்?

பெற்றோர்களாகிய நாமும் பல நேரங்களில் கடவுளின் எண்ணங்களுக்கு முதன்மை தராமல், வெறும் மனித உணர்வுகளுக்கும் உலகப் போக்கிற்கும் இடம் கொடுத்து வழிதவறி விடுகிறோம். நம்முடைய இல்லங்களில் இறைவோடு இணைந்த ஒரு அமைதியான சூழலையோ, ஆன்மீக மகிழ்ச்சி நிறைந்த குடும்பக் கட்டமைப்பையோ உருவாக்க நாம் தவறுகிறோம்.

வாழ்க்கைப் போராட்டம், பொருளாதாரத் தேவைகள், குடும்பப் பிணக்குகள், கோபம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக நாம் வெளிப்படுத்திய எதிர்மறையான சூழலால், வீடு என்பது பிள்ளைகளுக்கு ஓர் அமைதியான புகலிடமாக அமையாமல் போய்விட்டது. வீட்டில் உண்மையான அன்பையும், வழிகாட்டுதலையும், இறை அமைதியையும் அனுபவிக்க முடியாத சூழலில்தான், பிள்ளைகள் அந்த மனநிறைவைத் தேடி கைபேசித் திரைகளுக்கும் சமூக ஊடகங்களுக்கும் தஞ்சம் புகுகின்றார்கள்.

3. காணாமற்போன மகனின் உவமையும் இல்லத்தின் சூழலும்

லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் காணாமற்போன மகனின் உவமையை நாம் இங்குச் சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

தந்தையின் சொத்துக்களை அழித்து, பன்றிகள் தின்னும் உணவைக் கூட உண்ண முடியாமல் தவித்த அந்த இளைய மகனுக்கு, தன் தவறை உணர்ந்த கணத்தில் என்ன நினைவுக்கு வந்தது? "என் தந்தையின் பணியாளர்களுக்குத் தாராளமாய் உணவு இருக்கிறதே!" அவனுடைய தந்தையின் இல்லத்தில் நிலவிய தாராள குணமும், அன்பான சூழலும், பாதுகாப்பும்தான் அவனது நினைவுக்கு வந்தன. அந்தச் சிறப்பான குடும்பச் சூழலே, "நான் எழுந்து என் தந்தையிடம் செல்வேன்" என்று அவனை நம்பிக்கையோடு மீண்டும் இல்லம் நோக்கி வரச் செய்தது.

இன்று நம்முடைய பிள்ளைகளும் இந்த மாய உலகத்தில் தங்களை இழந்து தவிக்கும் வேளையில், அவர்கள் மீண்டும் விரும்பித் திரும்பி வருவதற்கு ஏற்ற அன்பான, இறைப்பற்றுள்ள சூழல் நம் இல்லங்களில் நிலவுகிறதா?

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் பின்வருமாறு அறிவுறுத்துகின்றார்:

"இவ்வுலகப் போக்குக்கு ஒத்துப்போகாதீர்கள்; மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று உருமாறுவதாக" (உரோமையர் 12:2)

நாம் உலகப் போக்கிலிருந்து மாறுபட்டு, நம் இல்லங்களை மீண்டும் இறைவனின் அருளும் அன்பும் நிறைந்த வழிபாட்டுக் களமாக மாற்ற வேண்டிய தருணம் இதுவே.

4. நடைமுறை வாழ்வியல் வழிநடத்துதல்

இன்றைய போலி உலகத்திலிருந்து விலகி, உண்மையான, ஆவியான வாழ்வுக்குத் திரும்பி வர பெற்றோர் மற்றும் இளைஞர்களுக்கான நடைமுறை வழிகாட்டல்கள் இதோ:

பெற்றோருக்கான கடமைகள் (இறைச்சூழலை உருவாக்குதல்):

  1. இல்லங்களை மகிழ்ச்சியின் புகலிடமாக்குங்கள்: வீட்டை வெறும் சட்டதிட்டங்களும் கோபமும் நிறைந்த இடமாக மாற்றாமல், இயேசுவை மையமாகக் கொண்ட ஜெபமும், பரிவும், அன்பும் நிறைந்ததாக உருவாக்குங்கள்.

  2. திரையற்ற நேரங்களை நடைமுறைப்படுத்துங்கள் (Screen-Free Moments): உணவருந்தும் வேளையிலும், இரவு குடும்ப செபத்தின்போதும் பெற்றோர் முதலில் தங்கள் கைபேசிகளை ஒதுக்கிவைத்துவிட்டு, பிள்ளைகளின் உணர்வுகளுக்கு அன்போடு செவிசாய்க்க வேண்டும்.

  3. பொறுமையான வரவேற்பு: பிள்ளைகள் தவறு செய்து உணர்ந்து வரும்போது, கண்டிப்பைக் காட்டாமல் இறைவனின் இரக்கத்தோடு அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இளைஞர்களுக்கான கடமைகள் (உண்மை வாழ்வுக்குத் திரும்புதல்):

  1. போலி உலகை அடையாளம் காணுங்கள்: திரையில் காணும் உலகம் ஒரு தற்காலிகப் பிம்பமே; உண்மையான அன்பும் பாதுகாப்பும் இறைவனிடமும் உங்கள் குடும்பத்திலும் மட்டுமே உண்டு என்பதை உணருங்கள்.

  2. நடைமுறை மனித உறவுகள் (Real Connections): சமூக ஊடகங்களின் விருப்பக்குறிகளை (Likes) விட, பெற்றோரின் முகத்தைப் பார்த்துப் பேசுவது, குடும்பத்தோடு நேரம் செலவிடுவது போன்ற இயல்பான மனித உறவுகளுக்கு முதன்மை தாருங்கள்.

  3. சுய கட்டுப்பாடு (Digital Fasting): "தன்னலம் துறந்து தன் சிலுவையைத் தூக்கட்டும்" என்ற இறைவாக்கிற்கு இணங்க, உறங்கும் முன்பும், குடும்ப வழிபாட்டின்போதும் கைபேசியைப் பயன்படுத்தாமல் இருக்கும் சுய கட்டுப்பாட்டைப் பழகுங்கள்.

ஆண்டவருக்குள் அன்புமிக்கவர்களே, நம் இல்லங்கள் மீண்டும் இறைப் பிரசன்னத்தாலும் அன்பினாலும் நிரம்பும்போது, மாய உலகத்தில் தொலைந்துபோன நம் பிள்ளைகள், அதிகாரத்தால் அல்ல... அன்பின் ஈர்ப்பால் நிச்சயம் இல்லம் திரும்புவார்கள். அத்தகைய ஆசீர்வாதமான சூழலை நம் இல்லங்களில் உருவாக்கத் தூய ஆவியார் நம்மை உருமாற்றுவாராக.

ஆமென்.

Reader Dialogue

Leave Comments or Feedback

Have a thought, question, or commentary on this reflection? Share your feedback directly with Fr. Jackson.